கடந்த சில நாட்களாக பன்றிக்காய்ச்சல் காற்று மூலம் பரவுவதை விட மீடியா மூலம் தான் பரவுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. இன்றும் நேற்றும் வந்த தலைப்பு செய்திகளை பார்த்தால் திகில் படம் டைட்டில் மாதிரி இருக்கிறது. மக்களின் பயத்தை போக்கவே இந்த பதிவு.
எப்ப இந்த பன்றிக் காய்ச்சல் வந்தது ?
கடந்த மார்ச் மாதம் பன்றிக் காய்ச்சல் நோய் என்று ஒரு புதிய நோய் தோன்றி இருப்பது தெரிய வந்தது.
எங்கிருந்து வந்தது ?
அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் உலகின் முதன் முதலாக இந்த நோய் தாக்கியது. முதலில் இதை சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றே நினைத்தனர். பிறகு தான் ரத்தப் பரிசோதனைகள் செய்த போது இது ஏதோ ஒரு புது வைரசின் வேலை என்பதை உணர்ந்தனர்.
பன்றிக்கும் இதற்கு என்ன சம்பந்தம் ?
பன்றிகளின் மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரலை தாக்கும் ஒரு வகை வைரஸ் இது என்று தெரிந்தது. இந்த வைரசால் பாதிக்கப்படும் பன்றியிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த வகை காய்ச்சலுக்கு பன்றிக் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டனர். ஆங்கிலத்தில் இது ஸ்வைன் ப்ளு என்றழைக்கப்படுகிறது.
பன்றி கறி சாப்பிட்டால் வருமா ?
பன்றிக் காய்ச்சல் என்பது நேரடியாக எல்லா பன்றிகளிடம் இருந்து வந்து விடுவதல்ல. பன்றிக் கறி சாப்பிட்டால் இந்த நோய் வந்து விடாது. கொடூர வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பன்றி பக்கத்தில் இருந்தாலோ, அல்லது அந்த வைரஸ் காற்று மூலம் பரவி, நம் உடம்புக்குள் புகுந்தாலோ பன்றிக் காய்ச்சல் வந்து விடும். நேற்றும், இன்றும் வந்த தலைப்பு செய்திகளை பார்த்தால் கூட இந்த காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது.
H1N1 என்றால் என்ன ?
இந்த வைரசின் கொடூரத் தன்மையை முழுமையாக கண்டு பிடித்த பிறகு இந்த வைரஸ்சுக்கு எச்.1 என்.1 என்று பெயரிட்டுள்ளனர். அவ்வளவு தான்.
எனக்கு ஜலதோஷம், காய்ச்சல் வரும் மாதிரி இருக்கிறது, எனக்கு பன்றி காய்ச்சலா ?
ஜலதோஷம், தொண்டை வறட்சி, உடல் வலி, காய்ச்சலுடன் சோர்வு, தலை வலி சிலருக்கு வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி எல்லாம் அறிகுறிகளாகும். அதற்காக காய்ச்சல் ஏற்பட்டதும் ஆ... பன்றிக் காய்ச்சல் என்று பீதி அடைந்து அலற வேண்டியதில்லை.
என்ன செய்ய வேண்டும் ?
முதலில் நீங்கள் வழக்கமாக சிகிச்சை பெறும் குடும்ப டாக்டர்களிடம் உடம்பை காட்டி ஆலோசனை பெறுங்கள். காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தயங்காமல் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து பார்த்து விடுங்கள்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் யாருக்கோ பன்றி காய்ச்சல் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்ய ?
உங்கள் பகுதியில், ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ள சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சல்- இருமல் இருக்கும் நோயாளிகள் அருகில் செல்லாதீர்கள். தும்மல் போட்டாலோ, இருமினாலோ பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் கொண்டாட்டத்துடன் பரவும். எனவே இருமல் ஆசாமிகள் பக்கத்தில் நிற்காதீர்கள். உங்களுக்கு இருமல் தும்பல் இருந்தால் கையில் ஒரு நல்ல கைகுட்டையை வைத்துக்கொள்ளுங்கள். வெளியில் சென்று விட்டு வந்ததும் கை, கால்களை சோப்பைக் கொண்டு கழுவுங்கள்.
பன்றி காய்ச்சல் குணப்படுத்த கூடியதா ?
பன்றிக் காய்ச்சல் என்பது குணப்படுத்தக் கூடிய நோய் உங்களுக்கு தெரிந்த பத்து பேருக்கு இந்த விழிப்புணர்வை பரப்புங்கள். அவர்களையும் பரப்ப சொல்லுங்கள்.
இதுவரை எவ்வளவு பேர் பாதிக்கப்படுள்ளார்கள் ?
10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இன்று உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுடன் உள்ளனர். எனவே பயம் வேண்டாம். இதில் 2 ஆயிரம் பேர் மட்டும் தான் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்குள் பன்றிக் காய்ச்சல் வராது என்று கடந்த ஜூன் மாதம் மார்தட்டி மத்திய அரசு சொன்னது. அப்படி இருக்க இந்தியாவிற்குள் எப்படி வந்தது ?
புனே பள்ளி மாணவர்கள் 11 பேர் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு சுற்றுலா சென்று வந்த போது கையோடு பன்றிக் காய்ச்சலையும் கொண்டு வந்துவிட்டனர்.
யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ?
சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களிடம் மிக, மிக எளிதாக பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிக் கொள்ளும். காற்று மூலம் மிக எளிதாக இந்த வைரஸ் பறக்கும். அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நுரையீரல், ஆஸ்த்மா நோயாளிகள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கொஞ்ச நாளைக்கு குழந்தைகளை முடிந்தவரை சுற்றுலா, மருத்துவமனைகள், ரயில்நிலையம், பஸ்நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பலாமா ?
சின்ன குழந்தைகள் என்றால் அனுப்பாதீர்கள். கொஞ்ச நாளைக்கு ஹோம் வர்க் செய்யாமல் இருக்கட்டுமே. 8வதுக்கு மேல் அனுப்பலாம். உங்கள் இஷ்டம்.
வேற என்ன செய்ய வேண்டும் ?
நல்லா தூங்க வேண்டும். காற்று வரும் இடத்தில் இருக்க வேண்டும்.
நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும். ஜாலியாக இருக்க வேண்டும்.
டாமிப்ளு மாத்திரை சாப்பிடலாமா ? பக்கவிளைவுகள் இருக்கும் என்று சொல்லுகிறார்களே ?
டாமிப்ளூ மருந்தை நாமாக எடுக்கக்கூடாது. மருத்துவர் சொன்ன பிறகு எடுத்துக்கொள்ளுங்கள். டாமிப்ளு மாத்திரை மட்டும் இல்லை, எல்லா ஆண்டிபயாடிக் மாதிரைகளிலும் பக்கவிளைவுகள் இருக்கிறது என்பது தான் உண்மை.
மீடியாவை பார்த்தால் பயமாக இருக்கிறதே ?
அவர்களுக்கு வேற நியூஸ் இல்லை என்ன செய்ய. இந்தியாவில் 1079 பேர்களில் இதுவரை 15 பேர் இறந்திருக்கிறார்கள். 589 பேர் சரியாகி வீட்டுக்கு வந்துவிட்டார்கள். மற்றவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்கள். கொஞ்ச நாளைக்கு மீடியாவை பார்க்காதீர்கள்/படிக்காதீர்கள். H1N1 சாதாரணமாக மழைகாலத்தில் வரும் ஃபுளுவைவிட மைல்டானது என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
பன்றி காய்ச்சல் வந்தால் மாஸ்க் அனிந்துக்கொள்ள சொல்லுகிறார்கள். மீடியாகாரர்கள் முதலில் மாஸ்க் அணிந்துக்கொள்ள வேண்டும், அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு பேசாமல் இருப்பார்கள்.
பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன்.
Posted by Anonymous at Thursday, August 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment